| நினைவுகளின் மனனம் |
| கனவுகளின் பயணம் |
| ஆசைகளின் ஜனனம் |
| ஆன்மாக்களின் சரணம் |
| காதல் ஒரு புதினம்!... |
காதல் நினைவே!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (13)
| உன் நினைவுகளைத் தேடிப் |
| பயணிக்கிறது என் நெஞ்சம்… |
| காரிருள் மெளனத்தைச் |
| சுமந்த கருவேலங்காட்டின் |
| அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய |
| சன்ன வெயிலாய்… |
| மேகங்களைத் தொட்டுவிட்ட |
| மலையின் மேனியைத்தொட்டு |
| பூத்துச் சிரிக்கும் மலர்களின் |
| புன்னகையை வருடிவந்து |
| சலசலக்கும் நீரோடையாய்… |
| ஆள் அரவமற்ற கானகத்தில் |
| அடர்ந்து படர்ந்து |
| பாரியிடம் தேர் பெற்ற |
| முல்லைக் கொடியில் முகிழ்த்த |
| முதல் பூவாய்… |
| என்றும் சுகமாயும் சுகந்தமாயும் |
| உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும் |
| கவர்கிறாய் என் கனவுகளை…. |
பாதங்கள்…
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
| கருவறையை உதைத்து |
| கவலைகளை உடைத்து |
| அறிவைத் தேடி அன்பைத் தேடி |
| ஒரு பயணம்… |
| கல்வியைத் தேடி காதலைத் தேடி |
| ஒரு பயணம்… |
| பொருளைத் தேடி புகழைத் தேடி |
| ஒரு பயணம்… |
| பொறுப்புகள் சுமந்து புண்ணியம் தேடி |
| ஒரு பயணம்… |
| கருவறை தொடங்கி |
| கல்லறை நோக்கி |
| பாதங்களின் பயணம்… |
| தேடல்களின் பயணம்… |
காலத்தின் மறதி....
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
| காலம் மறக்கச்செய்ய மறந்துவிட்ட |
| பல நினைவுகளின் எச்சங்கள் |
| மனதின் மூலையில் மலைக்குன்றாய் |
| பாதையில் வரும் |
| பனிக்காற்றும் பூஞ்சோலைகளும் |
| முட்செடிகளும் புதர்காடுகளும் |
| தோண்டிப் பார்க்கவே செய்கின்றன |
| புதைந்திருக்கும் நினைவுகளை |
| எனக்கான ஒவ்வொரு |
| விடியல்களிலும் பொழுதுகளிலும் |
| காலதேவன் முன் மண்டியிட்டு மன்றாடுகிறேன் |
| அத்தனை நினைவுகளையும் அள்ளிச்செல் என |
| ஆனாலும் நினைவெச்சங்கள் எச்சங்களாகவே |
| நிகழ்வின் கணங்களை அச்சுறுத்திக் கொண்டே…. |
நிஜத்திற்காக…
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (12)
| பார்வை தொடும் தூரத்தில் |
| பாவை நீ இருந்தும் - இந்த |
| பாவி மனம் உன்னை நினைப்பதிலேயே |
| நெடுங்காலம் கழிக்கிறது |
| உன் மெளனம் மொழியாகிட |
| விழிகள் கவிபாடிட |
| நிகழப்போகும் நிஜத்திற்காக |
| காத்திருக்கும் என் மனம் |
| பல கனவுகளோடு…. |





