கனவுகள் கவர்ந்த உறக்கம்...































எங்கோ இலக்கின்றிச் செல்லும்
பறவையின் நுனிச்சிறகைப்
பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு...

இருண்மை தேசத்தில்
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
தேவதை உதிப்பதாக ஒரு கனவு....

கைப்பறித்து  மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன்  நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...

கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்...

மழை...















உள்ளத்து ஆசைதனை
மண் சேர்க்கத்துடிக்கும்
மேகத்தின்
கண்ணீர் விடு தூது...!

விழியோரம்
















உன் நினைவுகளென்ன
சுமைதாங்கியா!

வருடிச்சென்றதும்
வழிந்தது பாரம்

விழியோரம் ஈரமாய்....!

தூறல்...





சாலைக்குழியில் தஞ்சமடைந்த
மழை நீரும்
அதனை அலைபாயவைக்கும்
மரத்தூரலுமாய்

என் இதயமும்...
உன் காதலும்...

இறகைப்போலே...!

















தவழ்ந்துவரும் காற்றில் மிதந்து
திசைகளெங்கும் திரியும்
இறகைப்போலே...

பிரியங்களைச் சுமந்த
என் எண்ண அலைகள்
உன் சுவாசக்காற்று தேடி வருகிறது...

மனவாசல் திறந்து வைக்க
மறவாதே...!

நம்பிக்கை



















பேருந்து நிறுத்தத்தின்
பெருநெரிசலில்
கிடைத்ததொரு சிறுமூலையில்
கடை விரித்துக் காத்திருக்கும்
கிழவியின் கண்களில்...


குறும்பா ...




சாவு வீட்டிலும் சந்தோசம்
எச்சில் இலை கண்ட
நாய்களுக்கு...

இரவுகள்...
























சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...

குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...

எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!

தீபாவளித் திருநாள்!





















நண்பர்கள், சகோதரர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

என்றும் அன்புடன்
உங்கள் தோழி,
கவிநா....

பிரிவுத்தூறல்...!



















தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!


உடையும் கனவுகள்!






மஞ்சள்வெயில் மாலையில்
மெல்ல நகரும் முகில்கள்...
காற்றோடு
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிச்செல்வதைப்போல

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகள்...

சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச் 
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...







குறும்பா....





பரமன் பாம்புக்குப் படி அளந்தான்
பலியாகிப்போனது தவளை
மழைக்கால இரவு...

உன் நினைவின் சக்தி...!



விரத நாட்களின் பசியாக
விடுமுறை நாட்களின் பணியாக

இம்சித்துக்கொண்டிருக்கிறது
இதயத்தை
உன் நினைவுகள்...

கடல் தாண்டும் பறவைபோல்
மலை தாண்டும் முகிலைப்போல்

ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளுக்கு
ஆற்றல் அதிகமே!...

ஹைக்கூ...




நேற்றைய நிகழ்காலத்தைச் சிறைப்பிடித்த
இன்றைய இறந்தகாலம்
புகைப்படம்...






கனவோடு வா...





விளக்கு உமிழும் வெளிச்சத்தில்
நிறம் மாறும் சுவர்ப்பூச்சு...

ஓயாமல் சுழன்று
பெருமூச்செறியும் மின் விசிறி...

காற்றின் வேகத்தில் படபடத்துச்
சிரிக்கும் நாட்காட்டிக் காகிதங்கள்...

அயராது உழைக்கும்
கடிகார முட்களின் காலடி ஓசை...

என,

உயிரற்ற பொருட்களெல்லாம்
உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்க...

என் உறக்கத்திற்கும் உயிர்கொடுக்க
உன் கனவுகளைப் பரிசளித்தது இந்த இரவு...!

இரவோடு வரும் கனவோடு வா உயிரே...!!!


எதிர்த்துருவ விழிகள்...!



ஓடும் நீரையும் சிறைபிடிக்கும் புகைப்படமாய்...
நகரும் என் நிகழ்காலத்தைச்
சிறைபிடிக்கிறது உன்
காதல் கயல்விழிகள்...

எனை வஞ்சிக்கும் என்னமோ வஞ்சியுனக்கு?
காதற்பஞ்சும் கன்னி உன்
பார்வை நெருப்பும்
பற்றிக்கொண்டு எரியுதடி
பரந்த என் நெஞ்சில்...

உன் ஒற்றைத்துளிக் கண்ணீர்
எனக்கெனச் சுரந்தால் போதுமடி...
என் நெஞ்சத்து நெருப்பணைத்துக் குளிரூட்ட...
தீயாய் நீயும், நீராய் நானும்
நீ என்னை எரித்துக்கொண்டும்!
நான் உன்னை நனைத்துக்கொண்டும்!

எதிரெதிர்த்துருவங்கள் ஈர்க்குமாமே!
நீ என்னை ஈர்க்கிறாய்...
உண்மையைச் சொல்...
நான் உன்னை???...

கூ... கூ... ரயிலே...



தினமும் செய்யும் சமரச முயற்சி
என்றும் இணையா தண்டவாளம்
தொடரும் முயற்சியாய்
ரயிலின் பயணம்...


ஹைக்கூ...



தென்றல் தொட்டதும்
தன்னையே மாய்த்துக்கொள்கிறதோ
பத்தினி தீச்சுடர்...!

நன்றி...




தன்னைத் தருவித்த
மண்ணுக்குத் தலைவணக்கமோ...
தானே உதிர்ந்து
மண்ணைத்தொட்ட மலரிதழ்கள்!..

பிரிவு!!!!


எச்சில் விழுங்கி
ஈரப்படுத்திக்கொண்ட தொண்டையில் - இன்னும்
மிச்சமிருக்கிறது
உனக்கான என் அழுகை...

நீ என்னைப் பிரிந்தநாளின் துயரம் - என்
மனச்சுவற்றின் மேல் எம்பிக்குதிக்கிறது
உன்னுடனான இனிய நினைவுகளால்
மனச்சுவற்றின் உயரத்தை நீட்டித்துக்கொள்கிறேன்...

உண்மை சொல்லி - மனம்
உரக்கக் கத்தினாலும்
கண்ணில் வழியும் கண்ணீர் - அதன்
சத்தத்தைத் தன்னோடு கரைத்துக்கொண்டோடுகிறது...

அநாதை...



முகவரி இல்லாக் கடிதம்...
தனித்து மேயும் ஒற்றை ஆடு...
நெடுக உயர்ந்த பட்டமரம்...
கல்லடிப்பட்டு கதறும் நாய்க்குட்டி...
கையேந்தி நிற்கும் தெருவோரச்சிறுமி...
என்று எங்கேனும் எப்போதும் ஏதாவதொன்று
நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது
நான் அநாதை என்று...

என் செய்தாய் அன்பே?














என் இரவுக்குள்ளே இரைத்துவிட்டானோ
வானவில்லின் சாயங்களை
கனவுகள் எல்லாம்  வர்ணங்களில்...

என் இதயத்துக்குள்ளே இசைக்கவிட்டானோ
காட்டுக்குயிலின் கானங்களை
துடிப்புகள் எல்லாம்  ராகங்களில்...

என் உயிருக்குள்ளே உலவவிட்டானோ
நிம்மதியின் சாரங்களை
நினைவுகள் எல்லாம் சொர்க்கங்களில்...

சிறை...

















உனைச் சிறைவைப்பேன்
இரு இமைகளுக்குள்....

காதலனே....!

என் உறக்கம் திருடிய
கள்வன் நீ..!

மேகக்காதலி...!





















மிதக்கும் மேகங்களில்
ஒருத்தியாய் நான்...

காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...

உன்னில் பருகிய காதலை
மண்ணில் பொழிகிறேன் மழையாக...

மண்ணைச்சேர்ந்த காதல் மழை
மீண்டும் என் மடிசேர்கிறது...

இதோ...

மிதக்கும் மேகங்களில் ஒருத்தியாய்
மீண்டும் நான் - உன்

காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...

படம் உதவி - நன்றி நண்பர் விஷ்ணு...

கொலுசு...!
















என்ன தவம்தான்
செய்து வந்ததோ...?! - உன்
வெள்ளிக்கொலுசுகள்...
துள்ளி விளையாடும் -
உன் பாதங்களைக்
கிள்ளி உறவாடிக்களிக்கிறதே...!!!

காதல் சிற்பம்!





















கருவிழிக் கணைபட்டு
உருகியது எனதுள்ளம்...!!!

வழிகின்ற இதயத்தை வழித்தெடுத்து
வடித்துத் தருவாயா
களங்கமில்லாக் காதல் சிற்பத்தை...?

என்
ஆயுள் மேடை
ஆயத்தமாயிருக்கிறது...
அலங்கரிக்கவரும்
அற்புதக்காதலை நோக்கி...

ஹைக்கூ












கணவன் இறந்ததால் விதவைக்கோலமோ
வெள்ளைத் தாளின் மேல்
மைதீர்ந்த பேனா...

கனவுக்குழந்தை...!





















என் கனவுக்கு உயிர் கொடுத்த
காதலே...

உறக்கம் என்பதே
இறந்தகாலம் என்றாகிவிட்டது
எனக்கு...

என் கனவுக்குழந்தையிடம்
கண் சிமிட்டி விளையாடி...
கதை பேசி தூங்கவைக்க...

கூட்டிவருவாயா என் காதலியை...!